கூடுதலாக ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்களை நடத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்ற நாடுகள் முழுமையான ஆதரவை அளித்துள்ளனர். இந்த விவகாரம் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்கும் நிலையில் இதை அவர் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆலோசனை கூட்டம் 6 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு (2031-ம் ஆண்டு வரை) வருங்கால போட்டி அட்டவணை குறித்து விவாதம் நடந்தது. பின்னர் கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்த்தது. ஆனால் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் மேற்கண்ட 8 ஆண்டு காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும்.
இரண்டு 50 ஓவர் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளுடன் கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்கள் நடத்தப்படும் என்று தெரிகிறது. இவ்விரு தொடரும் 50 ஓவர் அடிப்படையில் நடத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி 6 அணிகள் பங்கேற்கும் வகையில் மினி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உலக அளவிலான போட்டியை நடத்தும் போது டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐ.சி.சி.யின் வருமானம் பெருமளவு அதிகரிக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்து தான் பெற முடியும். ஆனால் இரு நாட்டு தொடர் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.
“ஐ.சி.சி.யின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம் இரு நாட்டு தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஐ.சி.சி. போட்டிகளை அதிகப்படுத்துவதால் அது இரு நாட்டு தொடர்களை நிச்சயம் பாதிக்கும். எனவே இது குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய தலைவரே இறுதி முடிவை எடுப்பார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல்அதிகாரி ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்றதும் ஐ.சி.சி.யின் புதிய போட்டி அட்டவணை குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டி இருக்கும்.
இந்த சிக்கலை அவர் எப்படி சாதுர்யமாக கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கங்குலி பொறுப்பேற்பதற்கு முன்பே இப்படி ஒரு சிக்கல் பூதாகரமாக எழுந்துள்ளது. இருப்பினும் அவர் இந்த பிரச்சனையில் நிச்சயம் சிறந்த தீர்வை எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: